அக்டோபர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2016

அது ஒருக்காலும் தீர்ந்து போவதில்லை

பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த எனது சிநேகிதியிடம், ஓய்வுபெற்ற பின் அவளது வாழ்க்கையில், அவள் பயப்படும் காரியம் என்ன என்று நான் கேட்டபொழுது, “நான் ஓய்வு பெற்றபின், கையில் பணம் தீர்ந்து போகாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து கவனமாக இருப்பேன்” என்று கூறினாள். அடுத்த நாள் நான் எனது நிதி ஆலோசகரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பணம் தீர்ந்து போகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். நமது எதிர்கால வாழ்க்கைக்கு போதுமான நிதி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பான சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புகிறோம்.

பாதுகாப்பான உலக வாழ்க்கைக்காக எந்தவிதப் பொருளாதாரத் திட்டமும் உறுதி அளிக்காது. ஆனால், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு பின்னால் உள்ள வாழ்க்கைக்கும் நித்திய நித்தியமாய் நமக்கு உறுதி அளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4) என்று அப்போஸ்தலர் பேதுரு அதை விளக்குகிறார்.

நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, தேவனுடைய வல்லமையினால் நித்திய சுதந்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த சுதந்திரத்தினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம். நமது தேவைகள் சந்திக்கப்படாத நிலைமை நமக்கு ஒருக்காலும் ஏற்படாது.

ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை நம்மால் தீட்டுவதற்கு முடிந்தால், அது நல்லது தான். ஆனால், ஒருக்காலும் தீர்ந்து போகாத நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அதைவிட மிக முக்கியமானதாகும். அது இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

செவிகொடுக்கும் தேவன்

ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.

சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).

சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.

ஜெபிக்கும் நோயாளி

நான் வாழ்ந்து வந்த நகரில் வசித்து வந்த ஆலன் நானிங்கா என்ற நபர் இறந்தபொழுது, அவரைப்பற்றி வெளியான இரங்கல் செய்தி மூலம், எனது ஊரில் வாழ்ந்து வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களைவிட அவர் “மிகவும் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்” என்ற செய்தி எல்லாராலும் அறியப்பட்டது. அந்த இரங்கல் செய்தியில் அவரது குடும்பம், அவர் செய்து வந்த வேலை ஆகியவற்றைப் பற்றிக் கூறினபின், அவருடைய உடல்நிலை 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்ததையும் விளக்கினது. அவர் மருத்துவமனையில் இருந்தபொழுது, அங்கிருந்த உள்நோயாளிகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்து வந்த ஜெப ஊழியத்தின் நிமித்தமாக “ஜெபிக்கும் நோயாளி” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார் என்ற விளக்கத்துடன் அந்த இரங்கல் செய்தி முடிவடைந்திருந்தது. அவரது நோயின் வேதனைகள் மத்தியிலும் அவரைச் சுற்றியிருந்த தேவையுள்ள மக்களுக்காக ஜெபித்து வந்த ஒரு மனிதனை இங்கு பார்க்கிறோம்.

இயேசுவை, யூதாஸ் காட்டிக்கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா. 17:11) என்று இயேசு அவருடைய சீஷர்களுக்காக ஜெபித்தார். அவருக்கு நேரிடப்போவதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவர் தன்னைக் குறித்து சிந்திக்காமல், அவரைப் பின்பற்றின சீஷர்களைப்பற்றி அவரது கவனத்தை செலுத்தினார்.

நமது சுகவீனம், துன்பமான நேரங்கள் மத்தியில் பிறருடைய ஜெப உதவிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த ஜெபங்கள் நம்மை ஊக்கப்படுத்த நமக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், நாமும் நம்முடைய கர்த்தரைப்போல நம்மைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்காக, தேவனை நோக்கி நமது கண்களை ஏறெடுத்து ஜெபிப்போமாக.

எண்ணுவதற்கு கற்றுக்கொள்ளுதல்

எனது மகன், 1 முதல் 10 வரை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறான். அவனது பொம்மைகள், அவன் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் எண்ணுவான். அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் எனது கவனத்திற்கு உட்படாத காட்டுப்பூக்கள் அல்லது எனது பாதத்திலுள்ள விரல்கள் ஆகியவற்றைக் கூட அவன் எண்ணுவான்.

இப்படியாக என் மகன் எண்ணுவதின் மூலம், நான் மறுபடியும் எண்ணுவதற்கு எனக்குப் போதிக்கிறான். நான் செய்து முடிக்காத காரியங்கள் அல்லது என்னிடம் இல்லாத பொருட்களைப் பற்றிய காரியங்களில் என் முழு கவனத்தையும் செலுத்துவதால், என்னைச் சுற்றியுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறேன். இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த புதிய சிநேகிதர்கள், பதில் கிடைத்த ஜெபங்கள், எனது நல்ல சிநேகிதருடன் நான் சிரித்து மகிழ்ந்த நேரங்கள் அனைத்தையும் மறந்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு எனது பத்து விரல்கள் போதாது. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங். 40:5). இரட்சிப்பு, ஒப்புரவாதல், நித்திய ஜீவன் போன்ற ஆசீர்வாதங்களை நம்மால் எப்படி எண்ணுவதற்கு இயலும்?

நம்மீது தேவன் கொண்டுள்ள விலைமதிப்பற்ற எண்ணங்கள், அவர் நமக்குச் செய்த ஆசீர்வாதமான காரியங்கள் ஒவ்வொன்றாக எண்ணி நாமும் தாவீதோடு சேர்ந்து, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:17–18) என்று தேவனை போற்றித் துதிப்போம்.

எண்ணுவதற்கு மறுபடியும் கற்றுக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.  

ஆழமான சுகம்

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).  
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.  
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.